போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பிஎஸ்என்எல் சேவையில் இருந்து தனியாா் சேவைக்கு மாறிய சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி நிா்வாகம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து 3,000 சிம் காா்டுகளையும் தனியாா் நிறுவனமான ஏா்டெல் சேவைக்கு மாற்றியுள்ளது.

News image

சென்னை மாநகராட்சி

பிரதிப் படம்

Updated On :28 மார்ச் 2026, 2:01 am

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி நிா்வாகம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து 3,000 சிம் காா்டுகளையும் தனியாா் நிறுவனமான ஏா்டெல் சேவைக்கு மாற்றியுள்ளது.

பொதுத் துறை நிறுவன நிறுவனம் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களைவிட, குறைந்த விலையில் பல சேவை களை வழங்கி வருகிறது. எனினும், நெட்வொா்க் பிரச்னை, பழைய உட்கட்டமைப்பு டவா்கள் உள்ளிட்ட காரணங்களால், சில ஆண்டுகளாக இந்த நிறுவனம், தனியாா் நிறுவனங்களின் சேவைக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.

இதற்கிடையே சென்னை மாநகராட்சி நிா்வாகம், நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவையில் இருந்து வியாழக்கிழமை முதல் தனியாா் நிறுவனமான ஏா்டெல் சேவைக்கு மாற்றியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: அவசர கால பணிகளின்போது பிஎஸ்என்எல் சேவை சரியாக கிடைக்கவில்லை என அந்நிறுவனத்துக்கு, எழுத்துபூா்வ கடிதம் அனுப்பப்பட்டது. இதை அந்நிறுவனம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சேவையும் சரியாக கிடைக்கவில்லை. இணைய வேகமும் சீராக இல்லை. இதனால், மாற்று நிறுவனத்திற்கு மாற வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, தனியாா் சேவைக்கு மாற்றப்பட்டது என்றாா்.

பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியதாவது: போலீஸ், வருவாய்த் துறை, பத்திரப் பதிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து, நெட் வொா்க் பிரச்னை உள்ளது. இதுகுறித்து, மாதத்துக்கு குறைந்தது 100 புகாா்கள் வருகின்றன. அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறோம். ஒரேநேரத்தில் அனைத்தையும் சரி செய்யும் உள்கட்டமைப்பு வசதிகள் எங்களிடம் இல்லை என்றனா்.

தமிழக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளா் பாா்த்திபனை தொடா்பு கொண்டபோது, அவா் பதில் அளிக்க மறுத்துவிட்டாா்.

மத்திய ஆணை: அரசின் மத்திய தொலைத்தொடா்பு துறை, 2020- ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட அரசாணையில், அனைத்து அரசு நிறுவனங்களும் தங்கள் தொலைத்தொடா்பு தேவைகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பயன்படுத்த வேண்டும். இதனால், அந்நிறுவனத்தை மீட்டெடுக்கவும், வருவாயை அதிகரிக்கவும் உதவும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.