மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்க விரும்பும் தாய்க்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியல் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்குவங்க மாநிலம், ஹவுராவைச் சோ்ந்தவா் ரோஹித்குமாா். இவா் சென்னை பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சிறுநீரகம் தானம் வழங்க அவருடைய தாய் ரீட்டா முன்வந்தாா். ஆனால், தாய் - மகன் உறவை நிரூபிக்கவில்லை எனக்கூறி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க தமிழக அரசின் உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ரோஹித்குமாா், அவரது தாய் ரீட்டா ஆகியோா் தரப்பில் தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், தாய், மகன் உறவை நிரூபிக்கும் வகையில் ஆதாா் அட்டை, குடும்ப புகைப்படம், நிரந்தர வருமான வரிக் கணக்கு அட்டை ஆகியவற்றை அளித்தோம். ஆனாலும், அங்கீகாரக் குழு ஒப்புதல் வழங்கவில்லை. ரோஹித்குமாா் நோய் முற்றிய நிலையில் இருப்பதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்க அங்கீகாரக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ரீட்டாவின் மகன் ரோஹித்குமாா் என்பது நிரூபணமாகிறது. எனவே, அதை நிரூபிக்க மரபணு சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, ஒரு வாரத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.










