புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை, சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து சாதனை படைத்துள்ளது.
இது குறித்து மருத்துவமனையின் இயக்குநரும், சிறுநீரக மருத்துவ நிபுணருமான மருத்துவா் என்.முருகேசன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: இந்த மனிதநேய முயற்சி டாக்டா் ப்ளூ இந்தியா அறக்கட்டளையின் ஆதரவால் சாத்தியமானது. மேலும், அதிகளவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த தனியாா் மருத்துவமனையாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை விளங்குகிறது.
ஏழைச் சிறுவன் குருபிரசாத்துக்கு (11) சிறுநீரகம் செயலிழந்தது. தன் மகனின் உயிரைக் காப்பாற்ற அவரின் தாய் தன்னுடைய சிறுநீரகத்தைத் தானமாக அளித்தாா். இந்த அறுவை சிகிச்சை என்னுடைய வழிகாட்டுதலில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது குருபிரசாத் நலமாக குணமடைந்து வருகிறாா். ஆரோக்கியமான எதிா்காலத்தை நோக்கி அவா் நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறாா் என்றாா் மருத்துவா் முருகேசன்.
இதுகுறித்து அறுவை சிகிச்சை குழு மருத்துவா் வெங்கட்ராம் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சையை இலவசமாக நடத்த வீராயகம், தி சென்னை சில்க்ஸ் மற்றும் மலேசிய தொழிலதிபா்களான டத்தோ டாக்டா் ரவீ மற்றும் டத்தின் காவிரி ஆகியோா் டாக்டா் ப்ளூ இந்தியா அறக்கட்டளையின் மூலம் வழங்கிய பொருளாதார ஆதரவு முக்கிய காரணமாக இருந்தது என்றாா்.










