பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செங்கல்பட்டு கடை வீதிகளில் திங்கள்கிழமை விற்பனை களை கட்டியது.
செங்கல்பட்டு மட்டுமன்றி, திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், கல்பாக்கம், புதுப்பட்டினம், சிங்கப்
பெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பொருள்கள் விற்பனையில் வியாபாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பொங்கல் திருநாளையொட்டி, கரும்புக் கட்டுகள், மஞ்சள் கொத்து விற்பனையும், காய்கறிகள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, மாடுகளை அலங்கரிக்கப்பதற்காக கொம்புகளுக்கு பூசப்படும் வண்ணப் பூச்சு, கழுத்து, கால் பகுதிகளில் கட்டப்படும் மணிகள், சலங்கைகள், வண்ணக் கயிறுகள், சங்குகள் உள்ளிட்ட அலங்காரப் பொருள் விற்பனைக் கடைகளிலும், அதிக அளவில் பொருள்களை வைத்து வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மார்க்கெட், ராஜாஜி தெரு, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடைகளை விரித்தும் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.