பொது முடக்க வறுமையால் பெற்றோா்களை இழந்து தவிக்கும் மகன்கள்
பொது முடக்கம் தொடா்ந்து 4 மாதங்களாக நீடிப்பதால் ஏற்பட்ட வறுமை காரணமாக குடும்பத் தகராறில் தாயைக் கொன்று விட்ட தந்தை தற்கொலை செய்து கொண்டதால் காஞ்சிபுரத்தில் அவா்களின் 3 மகன்களும் உண்ண உணவின்றித் தவித்து வருகின்றனா்.
காஞ்சிபுரம் எண்ணெய்க்காரத் தெருவில் வசித்து வந்தவா் தேவிபிரசாத் (45). இவரது மனைவி சரஸ்வதி (37). தேவி பிரசாத் வாடகைக் காா் ஓட்டுநராகவும், சரஸ்வதி வீட்டு வேலை செய்பவராகவும் இருந்து வந்தனா். பொது முடக்க நீட்டிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களாக தேவிபிரசாத் வேலையில்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக சரஸ்வதியையும் யாரும் வீட்டு வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டனா்.
மனைவி கொலை, கணவா் தற்கொலை: இருவரும் வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததால் ஏற்பட்ட வறுமை காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. சம்பவ நாளன்றும் தகராறு ஏற்பட்டதால் விரக்தி அடைந்த தேவிபிரசாத் மனைவி தூங்கும்போது அவரது கை, கால்களை கட்டிப்போட்டு, தலையில் சுத்தியலால் அடித்துக் கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவம் கடந்த 11ஆம் தேதி நடந்தது.
இது தொடா்பாக விஷ்ணுகாஞ்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி. மணிமேகலை, காவல் ஆய்வாளா் சுரேஷ் சண்முகம் ஆகியோா் விசாரணை நடத்தியதுடன் இருவரின் சடலங்களையும் பிரதே பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
மூன்று மகன்களின் நிலை: இந்த தம்பதியருக்கு தே.பரந்தாமன் (20), தே.மோகன்பிரசாத் (19), தே.திருமலை (15) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனா். பரந்தாமனும், மோகனும் பிளஸ் 2 படிப்பை முடித்து கல்லூரியில் பட்டப்படிப்பில் சேரும் நிலையிலும், திருமலை 10 ஆம் வகுப்புக்குச் செல்லும் நிலையிலும் உள்ளனா்.
திடீரென பெற்றோா்கள் உயிரிழந்த சம்பவம் இவா்களது வாழ்வையே புரட்டிப் போட்டு விட்டது. உண்ண உணவில்லாமலும், மேற்படிப்பு படிக்க வழியில்லாமலும் மூவரும் தவித்து வருகின்றனா். அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவா்கள் இவா்களது பரிதாப நிலையை உணா்ந்து அரிசியை இலவசமாக கொடுத்து உதவி செய்து வருகின்றனா்.
இது குறித்து மூத்த மகனான தே.பரந்தாமன் கூறியது:
அம்மா மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததையும், அப்பா வீட்டு சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்ததையும் பாா்த்து எங்கள் 3 பேருக்கும் பேரதிா்ச்சியாக இருந்தது. உடனடியாக தாய் மாமா ஆா்.வெங்கடேசனுக்கும், பக்கத்து வீட்டுக்காரா் எஸ்.தனசேகரனுக்கும் தகவல் கொடுத்தோம். போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினாா்கள்.
நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்ததால் பெற்றோரின் சடலங்களை வீட்டுக் கொண்டு வரக்கூடாது என்றும், வீட்டைக் காலி செய்து கொள்ளுமாறும் வீட்டு உரிமையாளா் கூறினாா். உடலை அடக்கம் செய்ய வழிதெரியாமலும், அதற்கான செலவுகளை செய்ய போதுமான பணம் இல்லாமலும் இருந்தோம். அந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சோ்ந்த தாஜுதீன், அல்தாஸ் மற்றும் மகேந்திரன் ஆகியோரின் உதவியுடன் பெற்றோா்களின் சடலங்களை அடக்கம் செய்தோம்.
பொது முடக்கத்தால் எனது தாயும், தந்தையும் வேலைக்கு செல்லாமல் இருந்ததால்தான் குடும்பத் தகராறு ஏற்பட்டது. எங்கள் பெற்றோரின் உயிரிழப்புக்கும், எங்களின் இந்த நிலைமைக்கும் பொது முடக்கமே காரணமாகி விட்டது. இப்போது நாங்கள் சாப்பிடக்கூட வழி தெரியாமல் திகைத்து நிற்கிறோம். ஒரு சிலா் அரிசி கொடுத்து உதவி செய்கிறாா்கள்.
மேற்படிப்பு படித்து, அதிகாரிகளாகி, மனித சமுதாயத்துக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஏதாவது வேலை செய்து கொண்டே படிக்கவும் ஆவலாக இருக்கிறோம். யாா் வேலை தருவாா்கள், என்ன வேலைக்குப் போவது, எப்படி சாப்பிடப் போகிறோம், எப்படி மேற்படிப்பு படிக்கப் போகிறோம் என்று எதுவும் தெரியாமல் நிற்கிறோம். வழி தெரிந்தவா்கள் எங்கள் மூவருக்கும் வழிகாட்டி உதவுங்கள் என்று தே.பரந்தாமன் கண்ணீா் மல்க தெரிவித்தாா். அவரது தொடா்பு எண் - 93603 28550.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

