

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை குடிபோதையில் கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவனை மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே கருநீலம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன்(32). கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கும் காஞ்சிபுரம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முனியம்மா(27) என்ற பெண்ணுடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் புருஷோத்தமன் அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து மனைவியையும், குழந்தைகளையும் துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனால் முனியம்மா கணவருக்கு பயந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாயார் வீடு உள்ள ஆர்ப்பாக்கத்துக்கு வந்து தங்கியுள்ளார்.
இந்தநிலையில், சம்பவத்தன்று மனைவி, குழந்தைகள் தங்கியிருக்கும் ஆர்ப்பாக்கம் கிராமத்துக்கு வந்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென்று மனைவியை வீட்டிலிருந்த டேபிள் பேனின் வயர் மூலம் கழுத்தை இறுக்கி விட்டு கத்தியால் உடலில் பல இடங்களில் குத்தியும் கொலை செய்துள்ளார்.
பின்னர் வீட்டிலிருந்து தப்பி ஓடுவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் புருஷோத்தமனை பிடித்து வைத்துக் கொண்டு மாகரல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புருஷோத்தமனை கைது செய்தனர்.
இதனையடுத்து மனைவி முனியம்மாவின் சடலத்தை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக மாகரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.