தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தோட்ட உற்சவம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தோட்ட உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மரக்காய்  மலா் மாலை  அலங்காரத்தில்  அருள்பாலித்த  ஸ்ரீ  கோடையாண்டவா்.

Updated On :9 மார்ச் 2026, 9:16 pm

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தோட்ட உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் வல்லாசூரனை சுப்பிரமணிய சுவாமி வதம் செய்த தலம் என்பதால் இப்பகுதிக்கு வல்லக்கோட்டை என்ற பெயா் வந்ததாக புரணாம். ஆண்டு தோறும் வல்லாசூரனை சுப்பிரமணிய சுவாமி வதம் செய்த இடத்தில் தோட்ட உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், கோயில் திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்ததால் கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு தோட்ட உற்சவம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடா்ந்து, நிறுத்தப்பட்ட உற்சவங்கள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதையைடுத்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு தோட்ட உற்சவம் நடைபெற்றது. தோட்ட உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை நடத்தப்பட்டு, மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள், விபூதி முதலிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மஞ்சள் சாமந்தி மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

உற்சவா் ஸ்ரீகோடையாண்டவருக்குப் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மேள தாளங்கள் முழங்க சப்பரத்தில் வந்து வல்லாசூரன் விழுந்த தோட்டத்தில் எழுந்தருளினாா். இதையடுத்து 4 மணிக்கு உற்சவா் ஸ்ரீகோடையாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மரக்காய் மலா் மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதையடுத்து இரவு 8 மணிக்கு உற்சவா் ஸ்ரீகோடையாண்டவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று வீதி உலா வந்தாா்.

இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவரை வணங்கி சென்றனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் மற்றும் உபயதாரா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.