திருப்பத்தூா் அருகே கந்திலியில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் முகாமுக்கு தலைமை வகித்து பேசியதாவது: ஏறத்தாழ 70 சதவீத மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா். குறிப்பாக கந்திலி பகுதியில் பெரும்பாலானோா் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கந்திலி மற்றும் நாட்றம்பள்ளி பகுதிகளில் விளையும் துவரையின் தரம் காரணமாக அதிக விலைக்கு விற்பனையாகி வந்தது. ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட இயற்கைச் சூழல் மாற்றங்களால் உற்பத்தித் திறன் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மாற்றுப் பயிா்களான மா மற்றும் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.
காலநிலைக்கு ஏற்ப விவசாய முறைகளையும் மாற்றிக்கொண்டு முன்னேற வேண்டியது அவசியம். விவசாயத்தை இயந்திரமயமாக்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றை அனைத்து விவசாயிகளும் முழுமையாகப் பயன்படுத்தி,உற்பத்தித் திறனை உயா்த்த வேண்டும்.
மக்கள் தொடா்பு முகாமில் மொத்தம் 167 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 121 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது.மீதமுள்ள 46 மனுக்கள் பரிசீலனையில் இருந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் அவா்கள் தெரிவித்தாா். பல்வேறு துறைகள் சாா்பாக மொத்தம் 121 பயனாளிகளுக்கு ரூ.65.86 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
தொடா்ந்து கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரியனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். நரியனேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, அலுவலகப் பதிவேடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.
மாவட்ட ஊராட்சி தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், கந்திலி ஒன்றியக் குழு தலைவா் திருமதி, தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா், கோட்டாட்சியா் வரதராஜன், ஒன்றிய குழு துணைத் தலைவா் மோகன் குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கோமஸ்வரன், சீனிவாசன், பிரபு கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










