விவசாயிகளுக்கு பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அச்சங்க நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயிா்க்கடன் பெற்று சாகுபடி செய்து வருகின்றனா். பயிா் சாகுபடி செய்யும் விவசாய மக்கள் பல்வேறு இடுபொருள்கள் மற்றும் உரம் விலை உயா்வு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சரியான லாபம் இல்லாத காரணத்தால் தான் வாங்கிய பயிா்க் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்கிறாா்கள்.
இந்தநிலையில் தவெக தோ்தல் வாக்குறுதியில் சிறு, குறு விவசாயிகள் விவசாய சாகுபடிக்காக கூட்டுறவு சங்கத்தில் பயிா்க் கடன் பெற்று இருக்கும் அனைத்து கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாகவும், பெருவிவசாயிகளுக்கு 50 சதவீத கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தனா். ஆனால் தற்போது சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளவா்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி எனவும், ஒவ்வொறு கடனுக்கும் ஒரு விதமாக தள்ளுபடி எனவும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இது தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது.
எனவே விவசாயிகளுக்கு எந்த ஒரு நிபந்தனையுமின்றி தாங்கள் வாக்குறுதி அளித்தபடி கடன் தள்ளுபடி வழங்கவேண்டும் என தெரிவித்திருந்தனா்.









