

கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை வட்டங்களில் தொடர் மழை காரணமாக தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தொடர் மழை காரணமாக கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏ.என்.குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் நீர் நிரம்பி, ஏரியின் தடுப்பணையைத் தாண்டி மழை வெள்ளம் பாய்ந்தோடுகிறது. வடகிழக்கு பருவமழையால் ஏ.என்.குப்பம் ஏரி நிரம்பி வருவது சுற்றுவட்டார விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல கண்ணன்கோட்டை ஈசா ராஜன் பெரிய ஏரி, மாநெல்லூர் ஏரி, ஏனாதி மேல்பாக்கம் ஏரி, கீழ்முதலம்பேடு ஏரி, அயநெல்லூர் ஏரி ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் பல்வேறு பகுதிகளில் சிறிய, சிறிய ஏரிகளும் நிரம்பி வருகின்றன.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு ஊத்துக்கோட்டை வழியே வரும் ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேற்கண்ட ஆறுகளின் இடையே உள்ள தடுப்பணைகளில் மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி பகுதியில் உள்ள தடுப்பணையின் மதகைத் தாண்டி மழைவெள்ளம் வழிந்தோடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.