திருக்கழுகுன்றம் வட்டத்துக்குள்பட்ட நடுவக்கரை கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பினரின் தாற்காலிக குடிசைக்குள் மழைநீர் புகுந்ததால் அவர்கள் குடிசைக்குள் பரண் அமைத்து தங்கியுள்ளனர்.
திருக்கழுகுன்றம் வட்டம், நடுவக்கரை கிராமத்தில் உள்ள இந்திரா நகரில் 40-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்ததை அடுத்து அதைப்பொருட்படுத்தாமல் வெயில் காலத்தில் வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் சமைத்து சாப்பிட்டு சாலையிலேயே படுத்து உறங்கி வந்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்தா புயல் காரணமாக, இரண்டு வீடுகளும், சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீடும் இடிந்து தரை மட்டமானது.
எனினும் வேறுவழியின்றி சில குடும்பத்தினர் ஆபத்தான நிலையிலும் அதே வீட்டில் தங்கியுள்ளனர். ஒரு சிலர் அப்பகுதியில் தாற்காலிக குடிசை அமைத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10 நாள்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நடுவக்கரை இருளர் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், தாற்காலிக குடிசைக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட இருளர் மக்கள் குடிசைக்குள் பரண் அமைத்து தங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். அரசு கட்டிக்கொடுத்த எல்லா வீடுகளும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எப்போது முழுவதுமாக இடிந்து விழும் எனத் தெரியாது.
வெயில் காலங்களில் சாலைகளில் படுத்துக் கொள்வோம். மழைக்காலங்களில் தங்குவதற்கு தற்போது குடிசை அமைத்து வருகிறோம். அந்த குடிசைக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பரண் அமைத்து தங்குகிறோம். அரசு அதிகாரிகளும் இங்கு வந்து பார்க்கவில்லை. இந்த இடிந்த கட்டடத்தில் தினமும் குழந்தைகளுடன் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம் என்றனர்.
அரசு உடனடியாக வீடுகள் கட்டித்தர ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.