

தனியார் வங்கியில் ரூ. 1 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் உணவகத்திற்கு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி பக்தவத்சலம். இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் 5,400 சதுர அடி பரப்பளவில் நான்கு அறைகள் கொண்ட கட்டடத்தில் கடந்த சில ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், பாலாஜி பக்தவத்சலம் கடந்த 2007ஆம் ஆண்டு இந்த இடத்தின் மீது சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் வங்கியில் ரூ. 1 கோடியைக் கடனாகப் பெற்றுள்ளார்.
ரூ. 1 கோடி கடனில் சுமார் ரூ.11 லட்சத்தை மட்டுமே வங்கியில் கட்டிய பாலாஜி பக்தவத்சலம் மீதிப் பணத்தை கடந்த சில ஆண்டுகளைக செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து வங்கியின் சார்பாக பல முறை அவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, வங்கி நிர்வாகத்தின் சார்பாக பக்தவத்சலத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர். இதையடுத்து வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத பக்தவத்சலத்தின் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சிருக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் தனியார் உணவகத்திற்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.