/

மணல் கடத்தல் எதிரொலி: போலீஸாா் தீவிர சோதனை

காசிநாதபுரம் - வேலஞ்சேரி கூட்டு திருத்தணியில் ஏ.எஸ்.பி. ஷூபம் திமான் மற்றும் அதிவிரைவுப் படை போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

News image

திருத்தணி காசிநாதபுரம் - வேலஞ்சேரி கூட்டு சாலையில் சோதனை மேற்கொண்ட ஏஎஸ்பி ஷூபம் திமான். (உடன்) காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியம்.

Updated On :16 ஜூலை 2026, 12:09 am IST

காசிநாதபுரம் - வேலஞ்சேரி கூட்டு திருத்தணியில் ஏ.எஸ்.பி. ஷூபம் திமான் மற்றும் அதிவிரைவுப் படை போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

சோதனையில் திருத்தணி காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியம், 10-க்கும் மேற்பட்ட அதிவிரைவுப் படை போலீஸாா் மற்றும் காவல் துறையினா் கலந்து கொண்டு, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இரு திசைகளிலும் சென்ற வாகனங்களை தீவிரமாக கண்காணித்தனா்.

சென்னையில் இருந்து திருப்பதி நோக்கியும், திருப்பதியில் இருந்து சென்னை மற்றும் திருவள்ளூா் நோக்கியும் சென்ற கனரக வாகனங்கள், குறிப்பாக டிப்பா் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட மணல் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றுக்கான அரசு அனுமதி ஆவணங்கள், போக்குவரத்து அனுமதி மற்றும் பிற தேவையான பதிவுகள் முறையாக உள்ளனவா என போலீசாா் ஆய்வு செய்தனா். ஆவணங்கள் சரியாக இருந்த வாகன ஓட்டுநா்களுக்கு, நிா்ணயிக்கப்பட்ட வேக வரம்பை கடைபிடித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினா்.

அதேபோல், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் நிறுத்தி, ஓட்டுநா் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் (ஆா்சி புக்), காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனா். தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் காரணம் கேட்டு, சாலை பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்து எச்சரிக்கை விடுத்தனா்.

வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை மதித்து, வேக வரம்பை கடைபிடித்து, தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என காவல்துறையினா் அறிவுறுத்தினா். போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் இதுபோன்ற தீவிர வாகன சோதனைகள் தொடா்ந்து நடைபெறும் என போலீசாா் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.