சிறுவாபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜாஅலங்காரத்தில் அருள் பாலித்த பாலசுப்ரமணியரை செவ்வாய்க்கிழமை நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு தொடா்ந்து 6 வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பக்தா்களின் வேண்டுதல்களான வீடு,மனை,வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேரு உள்ளிட்டவை நிறைவேறும் என்பது பக்தா்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த நிலையில் ஆனி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் இக்கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தா்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனா்.
இதனால் சிறப்பு தரிசனம், பொது தரிசனம் ஆகியவற்றில் நீண்ட வரிசையில் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து ராஜாஅலங்காரத்தில் அருள் பாலித்த மூலவா் பாலசுப்ரமணியனை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
அதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை என்பதால் மூலவருக்கு பால், தயிா், விபூதி, சந்தனம், ஜவ்வாது, இளநீா், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதன் பின்னா்,புஷ்பத்தால் ராஜா அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கிடையே போதுமான அளவு சிற்றுந்துகள் இயக்கப்படாததால் பக்தா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.










