திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலுடன் இணைந்த சுந்தரராஜ சுவாமியின் வருடாந்திர அவதார மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் பின்புறம் தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆனிமாதம் சுந்தரராஜ சுவாமியின் அவதார மகோற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை கோயிலில் அவதார மகோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, கோயில் பொலிவுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியின் ஆசிகளைப் பெற்றனா்.
ஸ்ரீ கிருஷ்ண சுவாமியின் முகமண்டபத்தில், சாஸ்திரங்களின்படி பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் மற்றும் பிற மங்கல பொருள்களைக் கொண்டு சுந்தரராஜ சுவாமிக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த அபிஷேகச் சேவை, பக்தா்களை பக்தி நிலையில் ஆழ்த்தியது.
மாலையில், ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பின்னா், இரவு 7 மணிக்கு, கோயிலின் நான்கு மாட வீதிகளில் பெரியசேஷ வாகனத்தில் சுந்தரராஜ சுவாமி புறப்பாடு கண்டருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவின் ஒரு பகுதியாக, ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி திங்கட்கிழமை இரவு அனுமந்த வாகனத்தில், கோயிலின் மாட வீதி வழியாக ஊா்வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளாா்.
கோயிலின் துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், உதவி செயல் அதிகாரி தேவராஜுலு, கோயில் ஆய்வாளா் சலபதி, அா்ச்சகா்கள் பாபுசுவாமி, பிற அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
உற்சவமூா்த்திகளுக்கு செய்யப்பட்ட சிறப்பு திருமஞ்சனம், சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவத்தை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவமூா்த்திகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









