/

தொழிலாளர்கள் 6 பேருக்கு கரோனா தொற்று: செய்யாறு அரசு பேருந்து பணிமனை மூடல் 

செய்யாறு அரசு பேருந்து பணிமனையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் பேருந்து பணிமனை திங்கள்கிழமை முதல் மூடப்பட்டது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:47 pm

DIN

செய்யாறு அரசு பேருந்து பணிமனையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் பேருந்து பணிமனை திங்கள்கிழமை முதல் மூடப்பட்டது. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் விழுப்புரம் கோட்டம் திருவண்ணாமலை மண்டலத்தில் அமைந்துள்ளது செய்யாறு பணிமனை. இப்பணிமனையில் 68 பேருந்துகளும், சுமார் 350 தொழிலாளர்கள் பணிபுரந்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டன. இருப்பினும் பொது மக்கள் நலன் கருதி அரசு சில மாவட்டங்களில் தளர்வுகள் அறிவித்ததுடன் குறிப்பிட்டப் பகுதிகளில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்ததின் பேரில் செய்யாறு பகுதியில் அரசு பேருந்துகள் சில ஒடத் தொடங்கின. அதன்படி செய்யாறு அரசு பேருந்து டெப்போவில் இருந்து மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டும் வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை, அப்துல்லாபுரம் கூட்ரோடு ஆகிய பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இப்பணிமனையைச் சேர்ந்த ஒட்டினர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஜூன்.12 -ல் தெரிய வந்தது. அதன் காரணமாக அவர் தொடர்பில் இருந்து வந்த தொழிலாளர்கள் 17 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் 3 டிரைவர்கள், 2 கண்டக்டர் என 5 பேருக்கு இருப்பது தெரிய வந்தது. இவர்களுடன் சேர்த்து இப்பணிமனையில் மொத்தம் 6 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சளி பரிசோதனைக்காக ஞாயிற்றுக்கிழமை சேகரிப்பட்டது. 

தற்காலிகமாக பணிமனை மூடல்: இப்பணி்மனையில் பணிபுரியும் 4 ஒட்டினர்கள், 2 நடத்துனர்கள் என 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன் பேரில் கரோனா தொற்று பரவமால் தடுக்கும் விதமாக தமிழக போக்குவரத்துறை அமைச்சரின் ஆலோசனையின் பேரில் திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் தசரதன் உத்தரவின் பேரில் செய்யாறு அரசு பேருந்து பணிமனை திங்கள்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிட்டார். கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக செய்யாறு அரசு பேருந்து பணிமனை மூடப்பட்டதால் பொது மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க வந்தவாசி, ஆரணி ஆகிய பணிமனைகளில் இருந்து வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை, அப்துல்லாபுரம் கூட்ரோடு ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.