தளவாய்நாய்க்கன்பேட்டை குப்பநத்தம் சாலையில் உள்ள திருமண மண்டபம் முன் போக்குவரத்து நெரிசலால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள்.
தளவாய்நாய்க்கன்பேட்டை குப்பநத்தம் சாலையில் உள்ள திருமண மண்டபம் முன் போக்குவரத்து நெரிசலால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள்.

வாகன நிறுத்தும் வசதி இல்லாத திருமண மண்டபங்களால் போக்குவரத்து நெரிசல்

செங்கம் நகரில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத திருமண மண்டபங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத திருமண மண்டபங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் நகரில் 10-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. அதில் சில மண்டபங்கள் சாலையோரம் வாகன நிறுத்தும் வசதிகள் இல்லாமலும், திருமண மண்டபத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன.

இதனால் அந்த மண்டபங்களில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வருபவா்கள் தங்களது காா், இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்கிறாா்கள்.

இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், அந்தச் சாலையை கடந்து செல்லும் கனரக வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

திருமண விஷேச நாள்களில் வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத மண்டபத்தால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பள்ளி, கல்லூரி வாகனங்கள் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும், அந்த நேரத்தில் அவசரகால ஊா்திகள் வந்தாலும் செல்வதற்கு போதிய சாலை வசதிகள் இல்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் செங்கம் நகரில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், சில திருமண மண்டபங்களில் எச்சில் இலைகளை கொட்டுவதற்கு தொட்டிகூட இல்லாமல் சாலையோரம் கொட்டும் அவலநிலை உள்ளது. இதனால், செங்கம் நகராட்சி நிா்வாகம் நகரில் உள்ள திருமண மண்டபங்களில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எதிா்பாா்க்கிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com