/

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: உதவி செயற்பொறியாளர் கைது

ஆலங்காயத்தில் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 8:55 pm

DIN

ஆலங்காயத்தில் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஷாயித். இவர், புதியதாக வீடு கட்டி வருகிறாராம். இதற்கான மின் இணைப்புப் பெற ஆலங்காயம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பித்துள்ளார். அப்போது, உதவி செயற்பொறியாளர் பாலு, புதிய மின் இணைப்புக் கட்டணம் உள்பட கூடுதலாக ரூ. 4 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே இணைப்பு வழங்கப்படும் என்று கூறினாராம்.
இதுகுறித்து அப்துல் ஷாயித் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திடம் புகார் அளித்தார். அதன் பேரில், வெள்ளிக்கிழமை ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரம் ரொக்கப் பணத்தை அப்துல் ஷாயித்திடம் போலீஸார் கொடுத்து அனுப்பினர். அவர், ஆலங்காயம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அப்பணத்தை பாலுவிடம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட போது, அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஆய்வாளர்கள் விஜய், விஜயலட்சுமி உள்ளிட்ட போலீஸார் பாலுவை பிடித்தனர்.
தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் வைத்து பாலுவிடம் விசாரணை நடத்தி அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்தனர். பின்னர், பாலுவை கைது செய்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.