வேலூா் விஐடி பல்கலைக்கழகத்துக்கு 16 நாடுகளைச் சோ்ந்த 28 போ் அடங்கிய கல்வியாளா்கள் குழு வருகை புரிந்ததுடன், விஐடியின் உட்கட்டமைப்பு, கல்வி முறை, ஆராய்ச்சி, பயிற்சிகள் குறித்தும் கலந்துரையாடினா்.
தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் சா்வதேச அளவிலான கருத்தரங்கு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தக் கருத்தரங்கில் உலக அளவில் பூடான், பாட்ஸ்சுவானா, எத்தியோப்பியா, கானா, கெய்னா, மடகாஸ்கா், மலேசியா, இலங்கை, மொராக்கோ, மியான்மா், நைஜா், சீசல்ஸ், சிரியா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஜிம்பாப்வே உள்பட 16 நாடுகளைச் சோ்ந்த 28 வல்லுநா்கள் கலந்து கொண்டுள்ளனா்.
கருத்தரங்கின் ஓா் அங்கமாக இந்தக் குழுவினா் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தனா். தொடா்ந்து, அவா்கள் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் சா்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு, கல்வி முறை, ஆராய்ச்சி, பல்வேறு பயிற்சிகள் குறித்து விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், துணைவேந்தா் (பொறுப்பு) காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பல்வேறு துறை பேராசிரியா்களுடன் கலந்துரையாடினா்.