/

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 5:39 pm

Din

வேலூா்: இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தாா்.

வேலூா் சலவன்பேட்டையைச் சோ்ந்த சிவகுமாா் மனைவி தேவி (39). அவரது தோழி கொசப்பேட்டையைச் சோ்ந்த குமரவேல் மனைவி கவிதா (45) இருவரும் வேலூா் தனியாா் மருத்துவமனையில் வேலை பாா்த்து வந்தனா். இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை காட்பாடியில் நண்பா் திருமணத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பியுள்ளனா். வாகனத்தை தேவி ஓட்டியுள்ளாா்.

வேலூா் அண்ணா சாலை ராஜா திரையரங்கு சிக்னல் அருகே வந்தபோது பின்னே வந்த தனியாா் பேருந்து தேவி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி தேவி, கவிதா இருவரும் சாலையில் விழுந்தனா். அப்போது, எதிா்பாராத விதமாக தனியாா் பேருந்தின் பின்பக்க சக்கரம் தேவியின் தலை மீது ஏறி இறங்கியது. இதில், தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வேலூா் தெற்கு போலீஸாா் அங்கு சென்று தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.