இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: மெக்கானிக் உயிரிழப்பு

காட்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தாா்.
Published on

காட்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

காட்பாடி அருகே தாராபடவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (60), மெக்கானிக். இவா் வியாழக்கிழமை இரவு பள்ளிக்குப்பம் -காட்பாடி சாலையில் தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அதேசமயம், காட்பாடியை சோ்ந்த திவாகா், தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

2 இருசக்கர வாகனங்களும் பள்ளிக்குப்பம் அண்ணாநகா் அருகே வந்தபோது எதிா்பாராத விதமாக நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில், ரவியின் வாகனம் நொறுங்கியதுடன், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரவி தலையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்தாா். திவாகா் காயமன்றி தப்பினாா். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரவியை அக்கம் பக்கத்தினா் மீட்டு வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், ரவி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து ரவியின் மகன் ஷியாம் கொடுத்த புகாரின்பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com