ஈரோடு, ஜூலை 14: தமிழ் வழி தனியார் பள்ளிகள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கூட செய்துகொள்ள முடியாத மோசமான நிலையில் உள்ளன. போதிய நிதி வசதி இல்லாமல் தடுமாறுóம் இத்தகைய பள்ளிகள் அரசு உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
தமிழகத்தில் 10,934 தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் 500 பள்ளிகள் மட்டுமே மாநில பாடத்திட்டத்தின்படி இயங்கும் தமிழ் வழி பள்ளிகள். இதில் 148 பள்ளிகள் அரசு உதவி பெறாதவை என்று கடந்த 2009-ம் ஆண்டில் வெளிடப்பட்ட அரசு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழியின் மீதுள்ள மோகத்தில் ஆங்கில வழி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் தற்போது 5500 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளும், 4100 மெட்ரிக் பள்ளிகளும், 38 ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. குழந்தைகளின் மழலை மொழியே ஆங்கிலமாக இருக்க வேண்டும் என்று கருதும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே, தமிழகத்தில் இப் பள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
இப் பள்ளிகள் கேட்கும் கல்விக் கட்டணத்தையும் பெற்றோர்கள் மறுப்பேதுமின்றி செலுத்தி விடுவதும், இதன் மூலம் இப் பள்ளிகள் சில ஆண்டுகளிலேயே கல்லூரிகளாக வளர்ந்து விடுவதும் ஆங்கிலப் பள்ளிகள் தொடங்குபவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துவிட்டது. ஆங்கிலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, தமிழ் வழி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை
பெருமளவில் குறைந்துவிட்டது.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை மட்டுமே அரசு வழங்குகிறது. கட்டடம், மாணவர்களுக்கான இருக்கை, ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளை பள்ளி நிர்வாகங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். போதிய நிதிவசதி இல்லாத இப் பள்ளிகளை தொடர்நது நடத்த முடியாமல், பிறரிடம் விற்றுவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதிக அளவில் கல்வி நிறுவனங்களை நடத்தும் வசதி படைத்தவர்களிடம் இப் பள்ளிகள் கைமாறிவிடுவதால், இவர்கள் இப் பள்ளிகளின் பெயரில் ஆங்கில வழி பள்ளிகளை தொடங்கி தங்களின் கல்வி வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்திக்கொள்கின்றனர். அரசு உதவி பெறாத பள்ளிகளை பொறுத்தவரை ஆசிரியர்களின் ஊதியத்தையும் பள்ளி நிர்வாகங்களே கொடுக்க வேண்டும். இதனால் இப் பள்ளிகளின் நிர்வாகங்கள்
ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியத்தை மட்டுமே அளிப்பதால் இப் பள்ளிகளுக்கு
திறமையான, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், இப் பள்ளிகளை அனுபவச்சான்று பெறும் மையமாகவே பார்க்கின்றனர்.
இதனால் இப் பள்ளி நிர்வாகத்தில் நிதி வசதி குறையக் குறைய இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வியின் தரமும் படிப்படியாகக் குறையும் நிலை ஏற்பட்டு வருகிறது.
பள்ளிகளில் தமிழ் மொழியை மட்டும் பாடமாக கற்றுக் கொடுப்பதன் மூலம் இன்றைய இளம் தலைமுறையினரை தமிழ் மொழியின் பக்கம் ஈர்த்துவிடமுடியாது.
அறிவியல், வரலாறு, வணிக பாடங்களையும் தாய் மொழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளுக்கு அடுத்தபடியாக மாணவர்களுக்கு இந்த வாய்ப்பினை அளிப்பவை தனியார் தமிழ் வழி பள்ளிகள்தான்.
இப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதன் மூலம் தமிழ் மொழியை மேலும் வளர்ச்சி பெறச் செய்ய முடியும்.
இதற்கு தமிழ் வழி அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு இலவச மின்சாரம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மானியம் உள்ளிட்ட உதவிகளை செய்யவும், அரசு உதவி பெறாத தமிழ் வழி பள்ளிகள் அனைத்தையும் அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கும் அரசு முன்வர வேண்டும்.
பள்ளிகளை நிர்வாகம் செய்ய முடியவில்லையெனில், இப்பள்ளிகளை எந்த நேரத்திலும் அரசு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது என்றாலும், வியாபாரமாகிப்போன கல்விச் சந்தையில், இதை சேவையாக எண்ணி பள்ளிகளை நிர்வகிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க, தமிழ் வழி பள்ளிகளை ஊக்கப்படுத்த வேண்டியது தமிழக அரசை பொறுத்தவரை காலத்தின் கட்டாயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.