பரிதவிப்பில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்

ஈரோடு, ஜன. 20: இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து 7 மாதங்களாகியும் முதலாமாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ள முடி
Updated on
2 min read

ஈரோடு, ஜன. 20: இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து 7 மாதங்களாகியும் முதலாமாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ள முடியாமல் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

 ÷தமிழகத்தில் உள்ள சுமார் 700 இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்க கட்டுப்பாட்டில் இந்நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

 ÷இங்கு பயிற்றுவிக்கப்படும் 2 ஆண்டு பட்டயப் படிப்பில் முதலாண்டில் 7 பாடங்களும், இரண்டாமாண்டில் 7 பாடங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படுகிறது. அரசு தேர்வுகள் துறை இத் தேர்வுகளை நடத்துகிறது.

 ÷முதலாண்டு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கி, மாத இறுதிக்குள் தேர்வுகள் முடிவடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஜூலை 19ம் தேதி தொடங்கி மாத இறுதிக்குள் மதிப்பெண் விவரங்கள் அரசு தேர்வு துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 ÷தேர்வு முடிந்து 7 மாதங்களும் விடைத்தாள் மதிப்பீடு செய்து 6 மாதங்களும் ஆனாலும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இரண்டாமாண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு டிச. 31ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாட்களாகியும் இதுவரை மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை.

 ÷இரண்டாமாண்டு வகுப்புகள் தொடங்கி 7 மாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்னும் 3 மாதங்களில் இப் பாடங்களுக்கான தேர்வுகள் வந்துவிடும். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இத்தேர்வை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 ÷முந்தைய தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், தற்போது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள், முதலாண்டில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் 2ம் ஆண்டில் எழுதுவதற்குத் தங்களை தயார்படுத்திக்கொள்ள உரிய கால அவகாசம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

 ÷10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தும் அரசுத் தேர்வுகள் துறைதான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும் தேர்வு நடத்துகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஒரு மாதத்தில் வெளியிடும் இத்துறை, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முதல் ஆண்டு தேர்வு முடிவுகளை 7 மாதங்கள் முடிந்தும் வெளியிடவில்லை.

 ÷கடந்த ஆண்டில் பெரும்பான்மையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 50 சதத்திற்கும் குறைவாக இருந்தது. இதனால் தேர்ச்சி பெறாத பாடங்களை இந்த ஆண்டில் மீண்டும் எழுதினாலும், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெறுவது கடினம். இதனால் இந்தப் பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் சதவிகிதம் இந்த ஆண்டு மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 ÷இதுகுறித்து தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஒருவர் தெரிவித்தது: ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் எதிர்காலம் கருதி, தேர்வு நடத்தப்படுவது குறித்தும், தேர்வு முடிவுகளை வெளியிடும் காலம் குறித்தும், அரசு உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும். இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு தனித் துறை அல்லது பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும்.

 ÷லட்சக் கணக்கான மாணவர்கள் எழுதும் பள்ளி பொதுத்தேர்வு முடிவுகளை இரண்டு மாதங்களில் வெளியிட முனைப்பு காட்டும் பள்ளிக் கல்வித்துறை, மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் தேர்வு முடிவுகளை அரையாண்டுக்கு மேல் வெளியிடாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com