கோவை விஜயா பதிப்பகத்தில் வாசகர்கள்-எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இச்சந்திப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, எழுத்தாளர் முத்துலட்சுமி ராகவன் பேசியது:
பொதுவாகவே பெண்களுக்கு ஆழ்ந்த வாசிப்புச் சிந்தனை உண்டு. இன்றை காலகட்டத்தில் இலக்கியம் என்பது ஒருவகை போதை போன்றது. இதுவரை 119 நாவல்கள் எழுதியிருக்கிறேன். எனது அடுத்த நாவலான "ஏழு ஸ்வரங்கள்' சேர, சோழர்கள் காலம் முதல் ஏழு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களைக் கொண்டது.
இந்த நாவல் அடுத்த இரண்டு மாதங்களில் வெளிவர உள்ளது. நான் விருதுக்காக எழுதுவதில்லை. வாசகர்களின் பாராட்டுக்களே மிகப்பெரிய விருதுகளுக்குச் சமம் என்றார்.
விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் பேசுகையில், தொல்காப்பியர், கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர் உள்ளிட்டோர் பயன்படுத்திய மொழியை நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நூல்களில் பல்வேறு அறிய பொக்கிஷங்கள் மறைந்துள்ளன. அவற்றை வெளிக்கொணர வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
அனைத்துப் புத்தகங்களையும் நம்மால் படிக்க முடியவில்லை என்றாலும் கூட, சுமார் 200, 300 புத்தகங்களையாவது ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். பிற மாவட்டங்களை காட்டிலும் கோவையில் புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் அதிகமாக உள்ளனர். புத்தகம் வாசிப்பதன் மூலமாக நல்ல பண்புகளையும், மற்றவர்களை நேசிக்கவும் கற்றுக்கொள்ளலாம் என்றார்.