இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பாக கோவையைச் சேர்ந்த இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார்(36). இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த இவர் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூரைச் சேர்ந்த சையது அபுதாகீர்(30), சதாம் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞரின் பெற்றோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் அளிக்க வந்தனர்.
அப்போது, சசிகுமார் கொலை வழக்குத் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக போலீஸார் அவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.