தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட முயற்சி: கேமரா பதிவை வைத்து போலீஸார் விசாரணை

கோவை சௌரிபாளையம் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி திருட முயன்ற நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:23 am IST

கோவை சௌரிபாளையம் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி திருட முயன்ற நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 கோவை சௌரிபாளையம் பிரிவு அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு ஏப்ரல்  5-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது ஏடிஎம் அட்டையைச் சொருகும் இடத்திலிருந்து கருவி கழன்று விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியைடைந்த வாடிக்கையாளர் அருகில் உள்ள வங்கிக் கிளைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
  இதையடுத்து, வங்கி அதிகாரிகள் வந்து பார்த்தபோது அது, ஏடிஎம் அட்டையின் தகவல்களைச் சட்டவிரோதமாகப் பிரதி எடுக்கும் ஸ்கிம்மர் கருவியும், சிறிய அளவிலான கேமராவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  
இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 
 இதுகுறித்து சைபர் கிரைம் ஆய்வாளர் என். மல்லிகா கூறியதாவது:  
சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்தில் பிற்பகல் 1 முதல் 3 மணிக்குள் மர்ம நபர்கள் இந்தக் கருவியைப் பொருத்தியிருக்கிறார்கள். மேலும், இடையே வந்து சரிபார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மதியம் 2.45 மணியளவில் அந்தக் கருவி பொருத்தப்பட்டிருப்பது கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, இடைப்பட்ட நேரத்தில் அங்கு பணம் எடுக்க அதிக அளவில் யாரும் வரவில்லை. எனினும் கேமராவில் இரண்டு பேரின் முகங்கள் பதிவாகியுள்ளன. அந்தப் பதிவைக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். 
 இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், "கோவை, சாய்பாபா காலனியில்  உள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேபோல ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. மேலும், நகரில் இரு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருந்தும் ஸ்வைப்பிங் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தியிருந்தனர். எனவே, வங்கி நிர்வாகங்கள் மேற்கொள்ளும் பாதுகாப்பைவிட  மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.  ஏடிஎம் தகவல்களை ஸ்கிம்மர் மூலமாகத் திருடி போலி ஏடிஎம் அட்டை   தயாரிக்க முடியும். 
  அதே வேளையில், சிறிய துளையின் அளவில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் பதிவை வைத்தும்  ரகசியக் குறியீட்டு எண்ணைத் தெரிந்து கொள்ளமுடியும். எனவே, ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்' என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.