/

சூலூர் அருகே கேரள போலீஸாரைத் தாக்கி நிதி நிறுவனஅதிபர் கடத்தல்

கோவை மாவட்டம், சூலூர் அருகே சனிக்கிழமை இரவு கேரள போலீஸாரை தாக்கி நிதி நிறுவனஅதிபரைக் கடத்திய 30 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :23 ஜூலை 2018, 7:44 am IST

கோவை மாவட்டம், சூலூர் அருகே சனிக்கிழமை இரவு கேரள போலீஸாரை தாக்கி நிதி நிறுவனஅதிபரைக் கடத்திய 30 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரளத்தில் பழைய பேருந்துகளை வாங்கி விற்கும் தொழில் செய்பவர் நிதி நிறுவன அதிபரான மஹாராஜன் (40). கொச்சி காவல் நிலையத்தில் இவர் மீது பண மோசடி வழக்கு உள்ளது. 
தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில்  அவர் சென்னை அருகே  ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதை செல்லிடப்பேசி  மூலம் போலீஸார் அறிந்தது அவரது நடவடிக்கைகளை நான்கு நாள்களாக கண்காணித்து வந்தனர். பிறகு மஹாராஜனை போலீஸார் சனிக்கிழமை பிற்பகலில் கைது செய்தனர். அவருடன் பிடிபட்ட மேலும் இருவரை அங்கேயே விடுவித்துவிட்டு, மஹாராஜனை மட்டும் அழைத்துக் கொண்டு காவல் ஆய்வாளர் அஜீஸ்,  உதவி ஆய்வாளர், இரண்டு காவலர்களுடன் காரில் கேரளம் புறப்பட்டனர்.
கோவை, கருமத்தம்பட்டியை அடுத்துள்ள கணியூர் சுங்கச்சாவடி அருகே சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் வந்தபோது, திடீரென இரு சக்கர வாகனங்கள், இரு கார்களில் இருந்து இறங்கிய 30 பேர் கொண்ட கும்பல் கேரள போலீஸார் வந்த வாகனத்தை வழிமறித்தது. அவர்கல் தொழிலதிபர் மஹாராஜனை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. 
வாளையாரை அடுத்துள்ள கேரள எல்லைக்குச் சென்ற போலீஸார் அந்த மாநில ஐ.ஜி. யிடம் இச் சம்பவம் பற்றி கூறினர். இதையடுத்து ஐ.ஜி. உத்தரவுப்படி பாலக்காடு டி.எஸ்.பி. விஜயகுமார் கோவை வந்து, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார்அளித்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கர் உத்தரவின்பேரில், காவல்ஆய்வாளர் சண்முகம் வழக்குப் பதிவு செய்தார். மேலும், கடத்தப்பட்ட தொழிலதிபர் மஹாராஜன், அவரைக் கடத்திச் சென்ற 30 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.