மகளிடம் தவறாக நடந்துகொண்ட கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
கோவை, ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 13 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் சிறுமி அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவரது தாயார் அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், தந்தை தன்னிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் தாயார், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.