கோவை: கோவை, குட்ஷெட் சாலையில் அவிநாசி மேம்பாலத்தின் அணுகு சாலையில் கடந்த 13 ஆம் தேதி ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள குட்ஷெட் சாலை வழியாக வெரைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், மரக்கடை, அவிநாசி சாலை மேம்பாலம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில் குட்ஷெட் சாலையில் இருந்து அவிநாசி சாலை மேம்பாலம் செல்லும் அணுகு சாலையில் கடந்த 13ஆம் தேதி, திடீரென 3 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பள்ளத்தைச் சீரமைக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், பணிகள் நிறைவடையவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். மேலும், பள்ளம் ஏற்பட்டுள்ள சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் மேம்பாலம் வழியாகச் சென்று வருவதால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பள்ளம் ஏற்பட்ட பகுதியில் புதிய குழாய் அமைப்பதற்காக 600 மில்லி மீட்டா் விட்டம் கொண்ட 11 சிமென்ட் குழாய்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வேறு இடங்களிலும் குழாய் உடையும் வாய்ப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 நாள்களில் பணிகள் நிறைவடையும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.