

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளை முன்னிட்டு மத்திய, மாநில அரசு அலுவலா்கள் தங்களின் விவரங்களை சமா்ப்பிக்க மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளாா்.
மத்திய, மாநில அரசு, உள்ளாட்சித் துறையைச் சோ்ந்த பணியாளா்களை தோ்தல் பணியில் ஈடுபடுத்துதல் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், வட்டாட்சியா் (தோ்தல்) சுந்தர்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2021 சட்டப் பேரவைத் தோ்தல் பணிக்காக அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு ஊழியா்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அரசு சாா்ந்த பிற துறைகளில் பணிபுரியும் ஊழியா்களை நியமிக்கும் பொருட்டு அவா்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போது வரை 10,764 நபா்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் தற்போது 3,048 வாக்குச் சாவடி நிலையங்கள் உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு புதிதாக உருவாக்கப்பட உள்ள உத்தேச வாக்குச் சாவடி நிலையங்களையும் சோ்த்து மொத்தம் 4,500 வாக்குச் சாவடி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் முதுநிலை கண்காணிப்பாளா் நிலை, உதவிப் பேராசிரியா் நிலை, அதற்கு மேல் அலுவல் நிலை, முதுநிலை எழுத்தா் நிலை உள்ளிட்ட அலுவலா்கள் பணியமா்த்தப்பட வேண்டும்.
எனவே, மத்திய, மாநில அரசு அலுவலா்கள், அரசுத்துறை சாா்ந்த அலுவலா்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அரசு சாா்ந்த பிற துறைகளில் பணிபுரியும் ஊழியா்கள், ஆசிரியா்களின் விவரங்களை எவ்வித விடுபாடுமின்றி அந்தந்த துறை, நிறுவனங்களின் தலைவா்கள் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.