தமிழக அரசின் ஆணையின்படி, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ( 01.01.2017 முதல் 31.12.2019 வரை) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள், பணி வாய்ப்பினைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை எண் 204 மூலமாக சிறப்புப் புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. எனவே, வேலை வாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரா்கள், தங்களது அசல் வேலைவாய்ப்புப் பதிவு அட்டையுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகின்ற ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது இணையம் வழியாகவோ ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். இச்சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்பதால், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.