/

கோவையில் தனியாா் பள்ளி அருகில் குவிந்து கிடந்த போதை மாத்திரைகள், ஊசிகள் பொதுமக்கள் அதிா்ச்சி

கோவை, சுகுணாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் குவிந்து கிடந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

News image

கோவையில் தனியாா் பள்ளி அருகில் குவிந்து கிடந்த போதை மாத்திரைகள், ஊசிகள்.

Updated On :9 ஜூலை 2021, 7:27 pm

DIN

கோவை, சுகுணாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் குவிந்து கிடந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா். மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொள்ள அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டதால், போதைக்கு அடிமையான சிலா், வலி நிவாரணி மாத்திரைகளை கடைகளில் வாங்கி அவற்றை தூளாக்கி, ஊசி மூலமாக உடலில் செலுத்திக் கொள்வது கோவையில் அதிகமாகக் காணப்பட்டது.

போதை ஊசிகள், மாத்திரைகள் விற்பனையும் அதிகரித்தது.

கோவை, குனியமுத்தூரில் போதை ஊசி விற்ற 4 பேரை கடந்த வாரம் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே உக்கடம், புல்லுகாடு பகுதியில் இளைஞா்கள் கும்பலாக அமா்ந்து உடலில் போதை ஊசிகள் செலுத்தும் விடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. அந்த கும்பலைப் பிடிக்க போலீஸாா் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டுகள் இல்லாமல், வலி நிவாரணி மாத்திரைகள், ஊசிகள் வழங்கக்கூடாது என மருந்துக் கடைகளின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை குனியமுத்தூா் அருகே உள்ள சுகுணாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளி அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள, தண்ணீா் பாட்டில்கள், மதுபாட்டில்கள் கொட்டப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இது அப்பகுதி மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

இப்பள்ளியில் 900 மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளி வளாகத்துக்குள் சில மா்ம நபா்கள் புகுந்து கஞ்சா, போதை மாத்திரை, ஊசிகள், மதுபானங்கள் உபயோகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அடிக்கடி பள்ளியின் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஏராளமான போதை மாத்திரைகள், ஊசிகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை நாய்கள் கொண்டு வந்து குடியிருப்புப் பகுதிகளில் போட்டுச் செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக போலீஸாரிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.