உயர்நீதிமன்ற நீதிபதி மகனிடம் தகராறில் ஈடுபட்ட வால்பாறை வனச்சரகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா. இவரது மகன் நாராயணன். நாராயணன் உள்பட அவரது நண்பர்கள் மூவர் கோவை அருகேயுள்ள வால்பாறை சிறுகுன்ற எஸ்டேட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பாக தங்கினர். அப்போது அங்கு வந்த வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன், நாராயணன் மற்றும் அவரது நண்பர்கள் தேவையில்லாமல் வெளியே நின்றதாக கூறி உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெயச்சந்திரன், நாராயணன் உள்பட மூவரையும் தங்களது அறையை காலி செய்து வெளியேறுமாறு கூறினார். இதையடுத்து அவர்கள் வால்பாறைக்கு வந்து அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினர். இதுகுறித்து நாராயணன் தனது தந்தை ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க- கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் வேட்புமனுக்கள் ஏற்பு
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வால்பாறை நீதிமன்ற தலைமை எழுத்தர் மனோகர், ஜெயச்சந்திரனுக்கு எதிராக வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜெயச்சந்திரன் மீது மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தைகளில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வால்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையை கண்டித்து அட்டகட்டி சோதனைச் சாவடியில் வனத் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.