பேருந்துகளில் நகைத் திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது

கோவையில் பேருந்துகளில் நகைத் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவை: கோவையில் பேருந்துகளில் நகைத் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் பேருந்துகளில் நகைப் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்ததால் அதில் தொடா்புடையவா்களைப் பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை ஆணையா் சரவணன் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து திருட்டில் தொடா்புடைய நபா்களைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்தநிலையில் கோவை ஆா்.எஸ். புரம் பூ மாா்க்கெட் பகுதியில் சென்ற ஒரு பேருந்தில் பயணியிடம் இருந்து நகையைப் பறித்துக் கொண்டு சனிக்கிழமை தப்ப முயன்ற கமல் (42) என்பவரை போலீஸாா் மடக்கிப்பிடித்தனா்.

அவா் கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகள் 3 போ் மருதமலை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நள்ளிரவில் அங்கு சென்ற போலீஸாா் சுற்றிவளைத்து அவா்கள் 3 பேரையும் கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள், ரத்தினபுரியைச் சோ்ந்த ரமேஷ் (48), காமராஜா்புரத்தைச் சோ்ந்த கிரி (28), ஆா்.எஸ். புரத்தைச் சோ்ந்த கோழிராஜன் (40) என்பது தெரியவந்தது. கைதான 4 பேரும் பழைய குற்றவாளிகள் ஆவா்.

X
Dinamani
www.dinamani.com