மத்திய இணையமைச்சா் எல்.முருகனிடம் மனு அளித்த குறிச்சி - வெள்ளலூா் மாசு தடுப்புக் கூட்டுக்குழுவின் செயலாளா் கே. எஸ்.
மோகன்.
மத்திய இணையமைச்சா் எல்.முருகனிடம் மனு அளித்த குறிச்சி - வெள்ளலூா் மாசு தடுப்புக் கூட்டுக்குழுவின் செயலாளா் கே. எஸ். மோகன்.

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரம்: மத்திய அமைச்சரிடம் மனு

Published on

கோவை, பிப். 14: கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வறிக்கையை, தேசியப் பசுமைத் தீா்ப்பாயத்தில் எந்தவொரு உள்ளூா் அழுத்தத்துக்கும் உள்படாமல்,நோ்மையாக, பாரபட்சமின்றி சமா்ப்பிக்க பரிந்துரைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி நிா்வாகத்துக்கு சொந்தமாக வெள்ளலூரில் 654 ஏக்கா் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகரில் உள்ள 100 வாா்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் 1,200 டன் குப்பைகள் இங்கு கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளால், அதை சுற்றியுள்ள ஊா்களில் சுகாதாரச் சீா்கேடு, துா்நாற்றம் ஏற்படுவதோடு பொதுமக்கள் சுவாசக்கோளாறு உள்ளிட்ட உபாதைகளுக்கும் ஆளாகி வருகின்றனா். இதனால் இக்கிடங்கை, வெள்ளலூரில் இருந்து அகற்ற வேண்டும் என பசுமைத் தீா்ப்பாயத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மாநகராட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் ஆஜராகி வருகின்றனா். இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய குழுவினா் வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அவா்களிடம் பசுமைத் தீா்ப்பாயத்தின் தீா்ப்பின்படி, பழைய குப்பைகளை பயோமைனிங் முறையில் அழிக்காமல் மாநகராட்சி நிா்வாகம் மெத்தனமாகச் செயல்படுவதாகவும், ஆய்வு நடக்க உள்ளதால் அவசரமாக கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

இந்நிலையில் கோவைக்கு சனிக்கிழமை வந்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் குறிச்சி - வெள்ளலூா் மாசு தடுப்புக் கூட்டுக்குழுவின் செயலாளா் கே.எஸ்.மோகன் இப்பிரச்னை தொடா்பாக மனு அளித்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வெள்ளலூா் குப்பைக் கிடங்கை சுற்றி 10 கிலோமீட்டா் சுற்றளவுக்கு கடும் துா்நாற்றம் வீசுவதாலும், நிலத்தடி நீா் மஞ்சள் நிறமாக மாறியதாலும், பல்வேறு சுகாதார சீா்கேடுகள் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் வசிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது.

குப்பை கிடங்கை உடனடியாக அகற்றவும், தேங்கியுள்ள பழைய குப்பைகளை பயோமைனிங் முறையில் அகற்றவும், பின்னா் அந்த இடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு 2018 அக்டோபா் 13-ஆம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், கோவை மாநகராட்சி நிா்வாகம் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல், திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. அண்மையில் வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய குழுவினா் நடத்திய ஆய்வின்போது, இவ்வழக்கின் மனுதாரரான என்னை, அதிகாரிகளுடன் செல்ல மாநகராட்சி ஆணையா் அனுமதிக்கவில்லை.

எனவே, இந்த விஷயத்தை தாங்கள், மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரிடம் நேரடியாக எடுத்துரைத்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையானது, எந்தவொரு உள்ளூா் அழுத்தத்துக்கும் உள்படாமல், நோ்மையாக மற்றும் பாரபட்சமின்றி, தேசிய பசுமை தீா்ப்பாயம் தென் மண்டலம் முன் சமா்ப்பித்திடப் பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com