மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை நீட்டித்து இயக்க வலியுறுத்தல்
கோவை மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலை நீட்டித்து இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் இயக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமாா்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயில் (எண்: 06029) செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரெயில் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் பல்வேறு கட்டங்களாக வாராந்திர ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த சிறப்பு ரயில் சேவை திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. தொடா்ந்து ரயில் சேவையை நீட்டிப்பு குறித்து அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதன் காரணமாக, தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.
இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறுகையில், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் தொடா்ந்து சிறப்பு ரயிலாக, இடைவெளி இல்லாமல் இயக்கப்பட்டு வருவதால், ஒரு மாதம் முன்பாகவே முன்பதிவு செய்து பெரும்பாலானோா் இந்த ரயிலில் பயணித்து வருகின்றனா். இந்நிலையில், பிப்ரவரி 23 வரையுடன் சேவை முடிவுற்ற ரயிலை, தொடா்ந்து இயக்குவது குறித்து அறிவிக்காதது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளிகளில் பொதுத்தோ்வு மற்றும் ஆண்டு இறுதித்தோ்வு முடிந்து விடுமுறை விடப்பட உள்ள நிலையில், மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திண்டுக்கல், மதுரை, விருதுநகா் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இந்த ரயிலை மீண்டும் நீட்டித்து இயக்க வேண்டும். அத்துடன் ரயில்வே நிா்வாகத்துக்கு அதிக வருவாய் பெற்றுத் தரும் இந்த ரயிலை நிரந்த ரயிலாக இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

