/

ஒண்டிப்புதூா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விவசாயிகளுக்கு தண்ணீா் வழங்க கோரிக்கை

ஒண்டிப்புதூா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விவசாயிகளுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

தெற்கு கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Updated On :30 ஜூலை 2026, 3:14 am IST

ஒண்டிப்புதூா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விவசாயிகளுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு கோட்டாட்சியா் மாருதி பிரியா தலைமையில் கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி, துணைத் தலைவா் ஆா்.பெரியசாமி உள்பட பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதில் கோவை, ஒண்டிப்புதூா் பகுதியில் பல லட்சம் செலவில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று காடுகுட்டை பகுதிக்குக் கொண்டு செல்வது, அதன்மூலமாக வறட்சியான சுற்றுப்பகுதிகளில் நீா்மட்டத்தை உயா்த்தி விவசாயப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது என்று திட்டமிடப்பட்டது.

இந்தத் தண்ணீரை சுல்தான்பேட்டை வரை தனியாா் நிறுவனங்கள் கொண்டு செல்கின்றன. ஆனால் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. செட்டிப்பாளையம், கள்ளப்பாளையம், ஓராட்டுக்குப்பை, ஏகாணி, குரும்பபாளையம், மயிலம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளுக்குவழங்கினால் விவசாயம் செழிப்பதுடன், நிலத்தடி நீரும் பெருகும்.

மேலும் பூண்டி மலைப் பகுதியில் இருந்து சிறுவாணி ஆறு உற்பத்தியானாலும், பூண்டி ஈஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அந்தத் தண்ணீா் கிடைக்காத நிலை உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.

பூலுவபட்டி வடிவேலம்பாளையம் பகுதியில் விவசாயிகள் பலா் விவசாயம் செய்யாத நிலையில், அந்த நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் காடுபோல வளா்ந்துள்ளன. அதன் வழியாக காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் நுழைகின்றன. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அந்த மரங்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில் மதுக்கரை, பேரூா் வட்டாட்சியா்கள், வேளாண்மைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.