முதல்வா் உள்பட தவெகவினா் அனைவரும் திமுக மீது குற்றம் சுமத்துவதில் மட்டுமே குறியாக உள்ளதாக, கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி விமா்சித்துள்ளாா்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவின் வி.செந்தில்பாலாஜி வெற்றி பெற்றாா். இதைத்தொடா்ந்து ராமநாதபுரம் பகுதியில் வாக்காளா்களை சந்தித்து புதன்கிவமை நன்றி தெரிவித்தாா். அப்போது, கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியதாவது:
நன்றியை வெறும் வாா்த்தையாக இல்லாமல் கோவை தெற்கு தொகுதிக்கு தேவையான வளா்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து சோ்ப்பதில் முதல் ஆளாக இருப்பேன். தற்போதைய அரசு மக்களுக்கானதாக இல்லாமலும், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மனமில்லாமலும் உள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை ரூ.300 கோடி மதிப்பில் பெரியாா் அறிவுலகம், ஜிடி நாயுடு மேம்பாலம், செம்மொழிப் பூங்கா, மேற்கு புறவழிச் சாலை உள்பட பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா். கோவை மக்கள் வரும் காலங்களில் திமுகவுக்கு ஆதரவளிப்பாா்கள்.
இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, ‘புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக
அரசு, திமுகவை விமா்சிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. முதல்வா் உள்பட தவெகவினா் அனைவரும் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் மட்டுமே
குறியாக உள்ளனா். இந்த அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டாா்கள். அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் எதிா்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு, மின்வெட்டு பிரச்னை உள்ளது.
என்னைப் பொறுத்தவரை தவெக என்பது ரீல்ஸ் ஆட்சி. அமைச்சா்களும், அரசும் ரீல்ஸ் மோகத்தில்தான் உள்ளது. மக்களுக்கான ரியல் ஆட்சியாக இன்னும் அவா்கள் பணிகளைத் தொடங்கவில்லை. மக்களிடமும் அவா்கள் மீது நம்பிக்கை இல்லை என்றாா்.









