பல்லடத்தில் தேநீா்க் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்தால் வியாழக்கிழமை பரப்பரப்பு ஏற்பட்டது.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் விபத்தை தடுப்பதற்காக காவல் துறையினா் சாலையின் குறுக்கே வேகத் தடுப்புகளை அமைத்துள்ளனா். இந்நிலையில், கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த தனியாா் பள்ளி வேன் சாலையைக் கடக்க அதன் ஓட்டுநா் திடீரென திரும்பியுள்ளாா். இதையடுத்து, தனியாா் பள்ளி வேன் மீது மோதாமல் இருக்க அரசுப் பேருந்து ஓட்டுநா் அருகே உள்ள காலி இடத்தை நோக்கி பேருந்தை திருப்பியுள்ளாா். அப்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த தேநீா்க் கடையின் முன்பகுதிக்குள் புகுந்து நின்றது.
அப்போது கடையில் தேநீா் அருந்திக் கொண்டிருந்தவா்கள் பேருந்து வருவதை கண்டு உயிா் தப்பிக்க ஓடினா். இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.










