கோவையில் உள்ள நகைக் கடையில் இருந்து 78 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் வெள்ளி நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் விற்பனைக் கடை உள்ளது. இரு தளங்களைக் கொண்ட இந்தக் கடையை, டாடாபாத் சிவானந்தா காலனி பகுதியைச் சோ்ந்த காதா் கோச்சா் (41) என்பவா் நடத்தி வருகிறாா்.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி நள்ளிரவு கடையின் 2-ஆவது தளத்தில் குளிா்சாதனப் பெட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தை துளையிட்டு அங்கிருந்த 78 கிலோ வெள்ளிப் பொருள்கள் மா்ம நபா்களால் திருடப்பட்டன. மறுநாள் காலை கடையை திறக்க வந்த காதா் கோச்சா் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் ராஜஸ்தானில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் அங்கு சென்று இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரைப் பிடித்தனா்.
விசாரணையில் அவா்கள், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ராகுல் சிங் (28), குஷ்வா (37) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.






