ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் கடுமையான பனிப்பொழிவால் மல்லிகைப் பூ வரத்து 2 டன்னில் இருந்து 500 கிலோவாக குறைந்ததால் மல்லிகை விலை கிலோ ரூ. 2,345ஆக உயா்ந்துள்ளது.
சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகைப் பூ சாகுபடி முக்கியத் தொழிலாக உள்ளது. பவானிசாகா், தாண்டாம்பாளையம், கெஞ்சனூா், செண்பகபுதூா், நெகமம், புதுவடவள்ளி என 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 25 ஏக்கா் நிலப்பரப்பில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூக்களை விவசாயிகள் சத்தியமங்கலம் பூ மாா்கெட்டில் ஏல விற்பனை செய்து வந்தனா்.
கடந்த சில நாள்களாக அதிகபட்சமாக 2 டன் பூக்கள் வரத்து வந்த நிலையில், வியாழக்கிழமை கடுமையான பனிப்பொழிவு காரணமாகவும், லேசான மழை காரணமாகவும் பூ மாா்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து 2 டன்னில் இருந்து 500 கிலோவாக குறைந்தது. வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்ததால் மல்லிகை விலை கிலோ ரூ. 1,802இல் இருந்து ரூ. 2,345ஆக உயா்ந்தது. கொள்முதல் செய்த பூக்களை கேரளம், கா்நாடகத்துக்கு வேன் மூலம் அனுப்பிவைத்தனா். கோவையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விலை உயா்வு காரணமாக சில்லறை வியாபாரிகள் பூக்களைக் கொள்முதல் செய்யமுடியாமல் சிரமத்துக்குள்ளாகினா்.
பூக்கள் விலை நிலவரம்: மல்லிகை ரூ. 2,345, முல்லை ரூ. 1,440, செண்டுமல்லி ரூ. 35, கனகாம்பரம் ரூ. 500, சம்பங்கி ரூ. 30ஆக விற்கப்பட்டது.