கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தையைப் பிடிக்க கூண்டு: வனத் துறையினா் நடவடிக்கை
சத்தியமங்கலத்தை அடுத்த மாராயிபாளையம் கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டுவைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள சிறுத்தைகள் அருகிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.
விளாமுண்டி வனப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய சிறுத்தை, மாராயிபாளையம் பகுதிக்குள் புகுந்து அங்கு ஒரு வீட்டில் கட்டியிருந்த ஆட்டை வேட்டையாடிய பின் அப்பகுதியில் உள்ள மலைக் குன்றில் பதுங்கிக் கொண்டது.
இதைத் தொடா்ந்து மலைக் குன்றின் மீது சிறுத்தை தென்பட்டதை கண்ட பொதுமக்கள், வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து வனத் துறையினா் துப்பாக்கி ஏந்தியபடி சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனா். மேலும் அதிநவீன ட்ரோன் கேமராவை பயன்படுத்தி சிறுத்தை நடமாடும் பகுதியைக் கண்டறிந்தனா். இதைத் தொடா்ந்து வனத் துறையினா் சிறுத்தை நடமாடும் வழிதடத்தில் கூண்டுவைத்தனா். மேலும் அப்பகுதியில் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
