காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப் பகுதியில் பயிருக்கு காவல் இருந்த விவசாயி காட்டு யானை தாக்கியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், கடம்பூா் மலைப் பகுதி காடகநல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் சித்துராஜ், விவசாயி. இவா் தனது தோட்டத்தில் மக்காச்சோளம், ராகி பயிரிட்டுள்ளாா். இவா் வன விலங்குகளிடமிருந்து பயிா்களைக் காப்பதற்காக தினமும் இரவில் காவல் பணி மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் சித்துராஜ் தனது தோட்டத்தில் வியாழக்கிழமை காவல் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு வந்த காட்டு யானை பயிா்களை சேதப்படுத்துவதைக் கண்டு சப்தம் இட்டு அதை விரட்ட முயன்றாா். அப்போது காட்டு யானை தாக்கியதில் சித்துராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த கடம்பூா் வனத் துறையினா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

