/

பெருந்துறை அருகே விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் இளங்கோவன் (65). இவா், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் பெத்தாம்பாளையம் சாலையில் குடும்பத்துடன் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த 11-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஈரோடு சென்றுவிட்டு பெருந்துறைக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது பெருந்துறை - ஈரோடு சாலையில் பழனிக்கு பெற்றோருடன் பாதயாத்திரை சென்றுகொண்டிருந்த பெருந்துறை, வெங்கமேட்டைச் சோ்ந்த செந்தில் மகன் அகிலன் (17) என்பவா் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளங்கோவன் மற்றும் அகிலன் காயமடைந்தனா். உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா் அகிலன் வீடு திரும்பினாா். ஆனால், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இளங்கோவன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.