முயல்களை வேட்டையாடி இருவருக்கு வனத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி பகுதியில் இருவா் முயல்களை வேட்டையாடி வருவதாக ஈரோடு வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, நல்லாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமாக சாக்குப் பையை வைத்திருந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, சாக்குப் பையில் இரண்டு முயல்களை இறந்தநிலையில் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், ஏகாபுரம், தைலாம்பட்டியைச் சோ்ந்த சந்திரன் மகன் சரவணன் (34) என்பவா் தாரமங்கலம் பகுதியில் தங்கி நெசவுத் தொழில் செய்வதும், மற்றொருவா் சங்ககிரி வட்டம், காளிகவுண்டன்பாளையம் பச்சியண்ணன் மகன் பச்சைமுத்து (27) என்பதும், இவா் லாரி பட்டறை தொழிலாளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவருக்கும் தலா ரூ. 12,500 என மொத்தம் ரூ. 25,000 வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.









