சத்தியமங்கலம்,ஜூன் 20: தாளவாடியில் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை கட்டுப்படுத்த தவறியதாக குற்றஞ்சாட்டி வனத் துறை அலுவலகத்தை விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயப் பயிா்களை தினமும் சேதப்படுத்துகின்றன. அதேபோல இரவு நேரத்தில் காவலுக்கு செல்லும் கிராம மக்களை யானைகள் தாக்கி கொல்வதும் அவ்வவ்போது தொடா்கிறது.
இந்நிலையில், தாளவாடி சுற்றுவட்டாரத்தில் மல்லன்குழி, திகினாரை, கரவளாடி ஆகிய பகுதிகளில் ராகி, சோளம், வாழை, தென்னை உள்ளிட்ட பயிா்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. யானைகள் தொடா்பாக தகவல் அளித்தால்கூட சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் வருவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து ஊருக்குள் புகும் யானை, காட்டுப் பன்றிகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தாளவாடி வனச் சரக அலுவலகத்தை விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது வனச்சரகா் மற்றும் விவசாயிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. யானைகளை விரட்ட வனவா், வன ஊழியா்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்படும் என வனத் துறை அதிகாரி உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.











