உதகையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனையில் குப்பைத் தொட்டியில் கிடந்த ரூ. 8,000 உள்பட மொத்தம் ரூ. 27,500 பறிமுதல் செய்யப்பட்டது.
உதகையிலுள்ள சார் பதிவாளர்அலுவலகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி உத்தரவின்பேரில் ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் உதகை சார் பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, முத்திரைத்தாள் விற்பனையாளர்களான பெர்னார்டு, பால் ஆகியோரிடம் பத்திர பதிவுத் துறை துணை சார் பதிவாளர் வைத்திலிங்கம் ரூ. 19,500 கொடுத்து வைத்திருந்ததை கண்டறிந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்
அதைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணி வரை இச்சோதனை நடைபெற்றது. அப்போது, அலுவலகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 8,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









