நீலகிரி மாவட்டத்தில் முக கவசம் அணியாதது உள்பட கரோனா விதிமுறைகளை மீறிய சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ரூ. 1.80 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் இம்மாதம் 7ஆம்தேதி முதல் திறக்கப்பட்டன. கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில், முக கவசம் அணிவது குறித்து அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவா்களைக் கண்காணிப்பதற்காக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறை மீறுவோருக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறுகையில், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கரோனா பரவுவதைத் தடுக்க அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த 7ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முக கவசம் அணியாதது உள்பட கரோனா விதிமுறைகளை மீறிய சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ரூ. 1.80 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.