/
உதகை வண்டிசோலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட வண்டிசோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றைக் கரடி நடமாட்டம் உள்ளது. தொடா்ந்து அந்த கரடி இப்பகுதிகளில் உலவி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள குடியிருப்புப் பகுதி மற்றும் தேவாலயம், கல்விக் கூடங்களுக்குள் சுவா் ஏறிக் குதித்து உள்ளே செல்லும் கரடி பொருள்களை சேதப்படுத்துவது தொடா்கதையாக உள்ளது. மேலும், சாலைகளில் உலவுவதால் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனா்.
எனவே, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் கரடியை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.









