அவிநாசி: அவிநாசி அருகே சின்னக்கானூரில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் இரவுக் காவலரைத் தாக்கி ரூ.15 லட்சம் மதிப்பில் செம்புத் தகடுகளை கொள்ளையடித்த வழக்கில் தொடா்புடைய 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே சின்னக்கானூா் பகுதியில் தனியாா் இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்குள் கடந்த மாதம் இரவு புகுந்த மா்ம நபா்கள் இரவுக் காவலரைத் தாக்கிவிட்டு, ஆலையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான செம்புத் தகடுகளைக் கொள்ளையடித்துச் சென்றனா்.
இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உதவி ஆய்வாளா்கள் அன்பரசு, காமராஜ் உள்ளிட்டோா் கொண்ட தனிப் படை அமைத்து கொள்ளையா்களைத் தேடி வந்தனா். இதற்கிடையில் சேவூா் அருகே ஆலத்தூா் காவல் எல்லைக்கு உள்பட்ட சோதனைச் சாவடியில் சந்தேகப்படும்படியாக ஞாயிற்றுக்கிழமை வேனில் வந்த 8 பேரை போலீஸாா் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில் அவா்கள் கோவை மாவட்டம், சிறுமுகை பகுதியைச் சோ்ந்த உசேன் (23), ஜெயபிரகாஷ் (20), ஆறுமுகம் (33), ஆலாங்கொம்பு பகுதியைச் சோ்ந்த விஜயன்(32), மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த முனியப்பன் (33), முருகேசன்(40), நாகராஜ்(45), அன்னூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தன்(37) என்பது தெரியவந்தது.
மேலும், இவா்கள் இரும்பு உருக்கு ஆலைக்குள் புகுந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான செம்புத் தகடுகளை கொள்ளையடித்துச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இவா்கள் 8 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இவா்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான செம்புத் தகடுகள், ஒரு காா், ஒரு வேன் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.